states

img

ராமர் கோவில் வெடிவைத்து தகர்க்கப்படும்: இஸ்லாமியர்கள் பெயரில் கலவரத்தை தூண்ட சதி

அயோத்தி ராமர் கோயில் வெடிவைத்து தகர்க்கப்படும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் தாக்கப்படுவார்கள் என இஸ்லாமியர்கள் பெயரில் இமெயில் அனுப்பி மிரட்டிய ஓம்பிரகாஷ் மிஸ்ரா, தஹார் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள், ஆன்மீக அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில், ராமர் கோவில் வெடிவைத்து தகர்க்கப்படும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரப்பிரதேச அதிரடிப்படையினர் தாக்கப்படுவார்கள் என்று கூறி உத்தரப்பிரதேச டிஜிபி தலைமையகத்திற்கு டிசம்பர் 27 அன்று எக்ஸ் தளத்திலிருந்து மிரட்டல் ஒன்று வந்துள்ளது.

இந்நிலையில், மின்னஞ்சல்களை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொண்டபோது மிரட்டல் விடுத்தவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்றும், அவர்கள் இஸ்லாமியர்கள் பெயரில் தவறாக எக்ஸ் தளத்திலிருந்து இமெயில் அனுப்பி மிரட்டியுள்ளனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, ஓம்பிரகாஷ் மிஸ்ரா, தஹார் சிங் ஆகியோர் அதரடிப்படையினரால் ஜனவரி 3 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பின்னணி குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அயோத்தியை வைத்து கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து மத ரீதியான அரசியலை செய்து வரும் பாஜக, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோவிலை திறக்க திட்டமிட்டிருப்பதும், தேர்லுக்கு முன்னதாகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் வெளியிடப்பட உள்ளது என்கிற செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், பாஜக இந்து-முஸ்லீம் இடையே பிளவை ஏற்படுத்தும் முனைப்பில் தீவிரமாக களமிறங்கி உள்ள நிலையில், இஸ்லாமியர் பெயரில் தூண்டப்பட்ட இந்த சதிக்கு பின்னால் சங்பரிவாரத்தினர் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.